Friday, September 28, 2012

15 ஆயிரம்தான் சம்பளமா?
நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்!

எளிய மேஜிக் ஃபார்முலா
'நான் கோடீஸ்வரன் ஆகவேண்டும்!’ - இப்படி ஒரு ஆசை எல்லோருக்கும் உண்டு. இதனால்தான் கோடி ரூபாயை வைத்து ஆரம்பிக்கப்படும் டிவி நிகழ்ச்சிகள் எல்லாமே ஹிட்டாகிவிடுகின்றன.
கோடீஸ்வரனாகும் ஆசை எல்லோருக்கும் இருந்தாலும், அந்த ஆசை நிறைவேறுவது மிகச் சிலருக்குதான். பிஸினஸ் செய்பவர்கள் கோடீஸ்வரர் ஆகலாம். பரம்பரை பணக்காரர்களாக இருப்பவர்கள் கோடீஸ்வரர் ஆகலாம். பூர்வீகச் சொத்துக்களை பெற்றவர்களும் கோடீஸ்வரர் ஆகலாம். ஆனால், வெறும் 15,000 ரூபாய் சம்பளம் வாங்கும் மாத வருமானக்காரர்களால் கோடீஸ்வரராக முடியுமா..? நிச்சயம் முடியும்..!  
எப்படி சாத்தியம்?
என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், புத்திசாலித்தனமான முதலீட்டின் மூலம் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம். இன்றைய தேதியில் நடுத்தர வயதில் மாதம் 15,000 சம்பாதிக்கிறவர்கள் தமிழகத்தில் பல லட்சம் பேர் இருப்பார்கள். இவர்கள் அத்தனை பேரும் தங்கள் அறுபதாவது வயதில் கோடீஸ்வரர் ஆவது நிச்சயம், நான் சொல்லும் வழிமுறையைப் பின்பற்றினால்.
என்ன இது, 30 வயதாகும் ஒருவர் மாத வருமானமாக பெறும் 15,000 சம்பளத்தைத் தொடர்ந்து அறுபது வயது வரை சேமித்தாலே 54 லட்சம் ரூபாய்தான் கிடைக்கும். பிறகு எப்படி ஒருவர் ஒரு கோடி பணத்தைச் சேர்க்க முடியும் என்கிறீர்களா? நிச்சயம் முடியும். 15,000 ரூபாய் வருமானம் சம்பாதிப்பவர் தனது வருமானத்தில் 10 சதவிகித தொகையை 15 சதவிகித வருமானம் எதிர்பார்க்கக்கூடிய மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தாலே தன்னுடைய 60-வது வயதில் அவர் கோடீஸ்வரர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது.
மூன்று நிபந்தனைகள்!

ஆனால், கோடீஸ்வரர் என்கிற இலக்கை அடைய நீங்கள் மூன்று நிபந்தனைகளை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும்.
1. இளமையிலேயே முதலீட்டைத் தொடங்கிவிடுவது, 
2. மாதம் தவறாமல் முதலீடு செய்வது, 
3. திட்டமிட்ட காலம் வரை முதலீடு செய்வது.
இந்த மூன்று நிபந்தனைகளுக்கும் நீங்கள் தயார் எனில், நீங்கள் கண்டிப்பாக உங்கள் அறுபதாவது வயதில் கோடீஸ்வரராகிவிடலாம்.
நான் முப்பது வயதைத் தாண்டிவிட்டேன். இனி நான் கோடீஸ்வரர் ஆகமுடியாதா என்று கேட்கிறீர்களா? உங்களாலும் முடியும். முப்பது வயதைத் தாண்டியவர்கள் கோடீஸ்வரர் ஆவது எப்படி என்பதை இனி பார்ப்போம்.
நாம் ஏன் முதலீடு செய்கிறோம்? நாம் முதலீடு செய்யும் பணத்திற்கு சிறந்த வட்டி அல்லது வருமானம் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில்தானே!? உங்களுக்கு நன்கு தெரிந்த, உங்களில் பலரும் செய்துவரும் முதலீடான மாதச் சீட்டு, தங்கம்,           அஞ்சல் வழி, வங்கி மற்றும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தாலும் நல்ல வருமானம் பார்த்து நீங்கள் கோடீஸ்வரர் ஆகலாம். ஆனால், இந்த முதலீடுகளுடன் ஒப்பிடும்போது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் நீங்கள் எதிர்பார்க்கும் வருமானம் காலத்தைப் பொறுத்தும், மாத முதலீட்டைப் பொறுத்தும் மாறுபடும். நீண்ட காலம் என்கிறபோது 15 சதவிகித வருமானத்தைவிட அதிகமான வருமானத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம்.
எட்டாவது அதிசயம்!
நாம் முதலீடு செய்யும் பணம் இரண்டு விதமாகச் செயல்படுகிறது. ஒன்று, நாம் முதலீடு செய்யும் பணம் நம் வளர்ச்சிக்கு உதவுகிறது. மற்றொன்று, நாம் பணத்தைக் கடன் வாங்கும்போது அது நம்  வீழ்ச்சிக்கு வழி செய்கிறது. இது அவரவர் செயலுக்கு ஏற்றார் போல ஆதரவாகவோ, எதிர்மறையாகவோ செயல்படும்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், 'நமது பணம் கூட்டு வட்டியில் வளரும்போது சிறிதாக தெரிந்தாலும், காலத்தின் அடிப்படையில் அதனுடைய வளர்ச்சி மிக மிகப் பெரிதாக இருக்கும்’ என்று கண்டுபிடித்தார். அதுவே, இன்று உலக அளவில் நிதி வர்த்தகத்தின் முதலீட்டு மந்திரமாக திகழ்கிறது. இதையே அவர் எட்டாவது அதிசயம் என்றார்.
மியூச்சுவல் ஃபண்ட்தான் பெஸ்ட்!
குறிப்பாக, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது மிகச் சிறந்தது. ஏனென்றால், அதில் மட்டும்தான் அவரவர் ரிஸ்குக்கு ஏற்ப விரும்பிய வருமானத்தை அதற்காக ஈட்டக்கூடிய  திட்டத்தில் முதலீடு செய்யமுடியும். அதாவது, 8%, 12%, 15% என்று அவரவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வருமான விகிதங்களை எதிர்பார்த்து முதலீடு செய்யலாம்.
பொதுவாக, மியூச்சுவல் ஃபண்டில் ரிஸ்க் அதிகம் என்கிற தவறான கண்ணோட்டம் மக்களை அதில் முதலீடு செய்யவிடாமல் தடையாக இருக்கிறது. இதில் ரிஸ்க் இருந்தாலும் பங்குச் சந்தையைவிட குறைவுதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.  
நாம் முதலீடு செய்யும் பணம், சில ஆண்டுகளிலேயே பெரிதாக வருமானம் தந்துவிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஒரு பிஸினஸைத் தொடங்கி அடுத்த சில மாதங்களிலேயே அது  பெரிய நிறுவனமாக உருவாகிவிடுமா? குறைந்தது இரண்டு வருடங்களாவது எல்லா வகையிலும் அனுபவம் பெற்று அதிகபட்சம் பத்து வருடம் வரை அதே தொழிலில் இருந்தால் மட்டுமே, நாம் மிகப் பெரிய தொழிலதிபராகி அந்த நிறுவனத்தையும் நல்ல நிலைமைக்குக் கொண்டு வரமுடியும். உண்மை நிலை இப்படி இருக்க, முதலீட்டு விஷயத்தில் மட்டும் உடனுக்குடனே வளர்ச்சி வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கவே செய்கிறது.
இன்னொரு விஷயத்தையும் முக்கியமாகச் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை பணத்தை முதலீடு செய்யும்போதும் உங்களுக்குள்ளேயே பின்வரும் கேள்விகளை எழுப்புங்கள். 'நான் ஏன் முதலீடு செய்கிறேன்? நான் அடைய வேண்டிய இலக்கு என்ன? என் இலக்கை அடைய இந்த முதலீடு சரியானதுதானா? இதில் உள்ள ரிஸ்க் என்ன?’ என்கிற அடிப்படை கேள்விகளை எழுப்பிவிட்டு, அதன்பிறகு பணத்தை முதலீடு செய்தால், உங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். ஒரு ரூபாய் பணம் சம்பாதிக்க நாம் கடுமையாக உழைக்கிறோம். அதே நேரத்தில், நாம் முதலீடு செய்யும் ஒரு ரூபாய் பணம் நமது வளர்ச்சிக்காக கடுமையாக உழைக்குமா என்று சிந்தித்து பார்க்கவேண்டும்.
இந்த அணுகுமுறையில் உங்கள் முதலீட்டை அமைத்துக் கொண்டால், நீங்கள் எந்த வயது கொண்டவராக இருந்தாலும் சரி, எந்த சதவிகித வருமானத்தை எதிர்பார்ப்பவராக இருந்தாலும் சரி, நீண்ட கால அடிப்படையில் உங்கள் முதலீட்டுடன் கூடிய வட்டி உங்களுக்கு ஒரு கோடி பணம் சேர்க்க உதவும். கீழே தந்துள்ள அட்டவணையைப் பார்த்து, உங்கள் வயதிற்கேற்ப வருமான வளர்ச்சியை எதிர்பாருங்கள்.
மேற்கண்ட அட்டவணைகளில் கிடைக்கும் வருமானம் ஒன்றுதான் என்றாலும் எதிர்பார்க்கும் வருமான விகிதம், முதலீட்டுத் தொகை, வயது மற்றும் கால தேவைகள் மாறுபடும். குறிப்பாக, நமது இந்திய பங்குச் சந்தை கடந்த இருபது வருடங் களாக சராசரியாக 17% -  க்கு மேல் வளர்ச்சி அடைந்துள்ளது. அதனால் எதிர்காலத்தில் நாம் செய்யும் முதலீடும் நல்ல வருமானம் தரும் என்று எதிர்பார்க்கலாம். ஒரு விதையிலிருந்து முளைத்து இலை, கிளை, பூ, காய் மற்றும் பழம் என்று மரமாக வளர குறைந்தது பத்து, இருபது வருடம் ஆகிற மாதிரி, அவரவர் லட்சிய தேவைக்கேற்ப முதலீடு செய்து நீண்ட கால அடிப்படையில் கூட்டு வட்டி வளர்ச்சியின்  (Power of Compounding) ஆசீர்வாதத்தோடு நீங்களும் கோடீஸ்வரர் ஆக வாழ்த்துக்கள்!
படம்: ஜே.முருகன்

விபத்து காப்பீடு: இன்னொரு ஹெல்மெட்!

விபத்து காப்பீடு: இன்னொரு ஹெல்மெட்!



'அவன் ரோட்டோரமாத்தான் நடந்து போயிருக்கான்..! பின்னாடி வந்த கார் மோதி, ஆள் காலி. இப்ப கஞ்சிக்கு வழியில்லாமல் குடும்பமே நடுத்தெருவுல நிக்குது’ - இது மாதிரி பலரும் சொல்லக் கேட்டிருப்போம். ஒருவருக்கு விபத்து ஏற்பட்டால் அவரது குடும்ப உறுப்பினர்கள் முதல் சுற்றத்தார்கள் வரை பலரும் மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். மனரீதியாக ஆறுதல் பெற முடியாவிட்டாலும் விபத்துக் காப்பீடு எடுத்து வைத்திருக்கும்பட்சத்தில் பொருளாதார சிக்கல்களில் நிச்சயம் மீண்டு வரமுடியும். வண்டி ஓட்டும்போது நாம் போட்டுக்கொள்ளும் ஹெல்மெட் நம் தலையைக் காக்கும் என்றால், இந்த விபத்துக் காப்பீடு பாலிசி நம்மை நம்பி இருக்கிறவர்களைக் காக்கும்.
விபத்துக் காப்பீடு!
விபத்துக் காப்பீடு என்பது ஒருவர் விபத்தினால் இறந்தாலோ அல்லது ஊனம் அடைந்தாலோ ஏற்படும் பணக் கஷ்டத்தை ஈடு செய்வதாக இருக்கிறது. 18 வயது முதல் 70 வயது உள்ளவர்கள் வரை இந்த விபத்துக் காப்பீட்டை எடுத்துக்கொள்ள முடியும். இந்த பாலிசியை பொதுக் காப்பீடு நிறுவனங்களில் எடுத்துக்கொள்ளலாம். சில தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் இந்த இன்ஷூரன்ஸ் பாலிசியை வழங்குகின்றன.
தேவையானவை:
இந்த பாலிசி எடுக்க பின்வரும் விஷயங்கள் தேவை.
புகைப்படம்.
புகைப்பட அடையாளத்துக்கான ஆதாரம்.
வீட்டு முகவரி மற்றும் அலுவலக முகவரிக்கான ஆதாரம்.
விண்ணப்பப்படிவம்.
எதற்கெல்லாம் இழப்பீடு கிடைக்கும்?
வாகன விபத்தினால் ஏற்படும் இறப்பு.
சாலையில் நடந்து போகும்போது வாகனம் மோதி ஏற்படும் இறப்பு.
வீடு இடிபாடுகளில் சிக்கி மரணமடைவது.
விபத்துகளினால் ஏற்படும் ஊனம்.
தற்காலிக ஊனத்தினால் அலுவலகம் செல்ல முடியாமல் இருப்பது போன்ற பிரச்னைகளுக்கும் இழப்பீடு கிடைக்கும்.
இழப்பீடு கிடைக்காத விஷயங்கள்..!
மது அருந்திவிட்டு வண்டி ஓட்டும்போது ஏற்படும் விபத்துகளுக்கு இழப்பீடு கிடைக்காது (ஊனம் மற்றும் மரணம் எதுவாக இருந்தாலும்).
இயற்கையான மரணம்.
தற்கொலை அல்லது வேண்டுமென்றே காயம் ஏற்படுத்திக்கொள்ளுதல்.
கொலை.
குழந்தை பிறப்பின்போது ஏற்படும் மரணத்திற்கு.
கருவுற்றிருக்கும்போது உண்டாகும் மரணத்திற்கு.
எவ்வளவு இழப்பீடு?
விபத்தால் இறப்பு நேரிட்டால் 100% இழப்பீடாக கிடைக்கும்.
இரு கண்கள் அல்லது இரு கை அல்லது இரு கால்கள் இழக்க நேரிட்டால் 100% இழப்பீடு கிடைக்கும்.
இரு கண் பார்வை, இரு கை அல்லது கால்கள், ஒரு கண் மற்றும் ஒரு கால் அல்லது ஒரு கண் மற்றும் ஒரு கை இழக்க நேரிட்டால் 100% இழப்பீடு கிடைக்கும்.
ஒரு கண் அல்லது ஒரு கை அல்லது ஒரு கால் இழந்தால் 50% இழப்பீடு கிடைக்கும்.
முற்றிலும் நிரந்தர ஊனம் அடைந்தால் 100% இழப்பீடு கிடைக்கும்.
பிரீமியம் விவரம்:
25,000 ரூபாய் கவரேஜுக்கு 15 ரூபாய் வருட பிரீமியம்.
ஒரு லட்சம் ரூபாய் கவரேஜுக்கு வருடம் 60 ரூபாய் பிரீமியம். கவரேஜ் மற்றும் வருடம் அதிகமாக அதிகமாக பிரீமியம் குறையும் என்பது சாதகமான விஷயம். தன்னுடைய வருமானத்தின் அடிப்படையில் ஒருவருக்கு அதிகபட்சம் 60 மடங்கு பாலிசி கவரேஜ் கிடைக்கும். இது நிறுவனங்களுக்கு நிறுவனம் மாறுபடும்.
கிளைம் செய்யும்போது சமர்ப்பிக்க வேண்டியவை:
கிளைம் ஃபார்மை பூர்த்தி செய்து தரவேண்டும்.
விபத்து ஏற்பட்ட உடனே அவரின் குடும்பத்தார்கள் இன்ஷூரன்ஸ் அலுவலகத்திற்கு போன் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
விபத்தில் ஊனமடைந்திருந்தால் ஊனத்தை ஊர்ஜிதப்படுத்தும் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
மரணம் ஏற்பட்டிருந்தால் மருத்துவமனையிலிருந்து பிரேத பரிசோதனை சான்றிதழ் வாங்கி சமர்ப்பிக்க வேண்டும்.
அலுவலக நேரங்களிலோ அல்லது விடுப்பு நாட்களிலோ விபத்து ஏற்பட்டு அதற்கு கிளைம் செய்வதாக இருந்தால் அலுவலகத்திலிருந்து சான்றிதழ் வாங்கி சமர்ப்பிக்க வேண்டும்.
இனி ஹெல்மெட்டுடன் இந்த பாலிசியையும் எடுத்து வைப்போம்!
- செ.கார்த்திகேயன்
''பொதுவாக விபத்துக் காப்பீடு பாலிசி என்றால் விபத்தால் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு இழப்பீடு கிடைக்கும். ஆனால் டிராஃபிக் ஆக்ஸிடன்ட் பாலிசியில் விபத்துக் காப்பீடு மட்டுமல்லாமல் மெடிக்ளைமும் கிடைக்கும்'' என்கிறார் நிதி ஆலோசகரான எஸ்.ராஜசேகரன். இந்த பாலிசியை 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளலாம். இதை எடுத்து வைத்திருக்கும்பட்சத்தில் விபத்துகளினால் உண்டாகும் மருத்துவமனை செலவுகளை (மருத்துவமனை அறை வாடகை, மருந்துச் செலவுகள், அறுவை சிகிச்சைக்கான செலவுகள், எக்ஸ்ரே செலவுகள் உள்ளிட்டவை) இந்த பாலிசியின் மூலம் கிளைம் செய்து கொள்ள முடியும். ஒரு லட்சம் ரூபாய் பாலிசிக்கு வருட பிரீமியம் 135 ரூபாய் மட்டுமே. இந்த பாலிசியை பொதுத்துறை நிறுவனமான நேஷனல் இன்ஷூரன்ஸ் வழங்கி வருகிறது. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!

இனி எல்லாம் வளமே!

இனி எல்லாம் வளமே!

''காசு இருக்கோ இல்லையோ, ஆனா கை நிறைய கடன் இருக்கு. அதை எப்படியாவது அடைக்கணும். என் மகனோட எதிர்காலத் தேவைகளுக்குப் பணம் சேர்க்கணும். என் ஓய்வுக்காலத்துக்குத் தேவையான தொகைக்கு இப்பயிருந்தாவது முதலீடு செய்தாகணும்'' என்று புதுச்சேரியிலிருந்து நிதி ஆலோசனைக் கேட்டு வந்திருந்தார் 35 வயதான ராமச்சந்திரன். தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். மாதச் சம்பளம் பிடித்தம் போக 20,000 ரூபாய். மனைவி சுயதொழில் செய்வதன் மூலம் மாதம் 12,000 ரூபாய் வருமானம் ஈட்டுகிறார். ஆக, குடும்பத்தின் மொத்த வருமானம் 32,000 ரூபாய். இவர்களுக்கு எட்டு வயதான செல்ல மகன் அஜய். தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான்.
தேவைகள்:
மகனை மருத்துவராக்க வேண்டும். இன்றைய நிலையில் எம்.பி.பி.எஸ். படிக்க 20 லட்சம் ரூபாய் தேவை.
மகனுக்கு 27 வயதில் திருமணம் செய்து வைக்க இன்றைய நிலையில் ஐந்து லட்சம் ரூபாய் தேவை.
ஓய்வுக்காலத்தில் யார் தயவையும் எதிர்பார்க்காமல் இன்றுபோல் அன்றும் வாழ முதலீடு செய்தல்.
இன்னும் பத்து வருடங்களுக்குள் சொந்த வீட்டை விரிவுபடுத்த பத்து லட்சம் ரூபாய் சம்பாதிக்க வேண்டும்.
தனது கடன் விவரம், சொத்து விவரம், குடும்பத்தின் வரவு செலவு கணக்குகள் என எல்லாவற்றையும் தெளிவாக எடுத்துச் சொல்லியிருந்தார் ராமச்சந்திரன். இவரின் விவரங்களை நன்கு அலசி ஆராய்ந்து நிதி ஆலோசனை சொல்லத் தயாரானார் நிதி ஆலோசகர் ஆர்.ராஜசேகரன்.

இன்ஷூரன்ஸ்!
ஏற்கெனவே தன் பெயரில் எடுத்து வைத்திருக்கும் லைஃப் இன்ஷூரன்ஸ் (கவரேஜ் ஐந்து லட்சம்) பாலிசிக்காக மாதம் 1,500 ரூபாய் பிரீமியம் கட்டி வருகிறார். இதுபோக 10 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு வருட பிரீமியம் 3,200 ரூபாய்.
குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்த்து இரண்டு லட்சம் ரூபாய்க்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் (ஃபேமிலி ஃப்ளோட்டர்) பாலிசி எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு வருட பிரீமியம் 4,600 ரூபாய்.
இந்த இரண்டு இன்ஷூரன்ஸ் பாலிசிகளைத் தவிர, தனிநபர் விபத்துக் காப்பீடு (கவரேஜ்: 10 லட்சம் ரூபாய் - வருட பிரீமியம் 1,250 ரூபாய்), டிராஃபிக் ஆக்ஸிடென்ட் புரொட்டக்ஷன் (கவரேஜ்: ஒரு லட்சம் - வருட பீரிமியம் 135 ரூபாய்), ஹவுஸ் இன்ஷூரன்ஸ் (கவரேஜ்: 30 லட்சம் ரூபாய் - வருட பிரீமியம் 4,600 ரூபாய்) எடுத்துக்கொள்ள வேண்டும்.
முதலீடு ஆரம்பிக்கும் முன்!
இன்றைய நிலையில் செலவுகள் போக எதிர்காலச் சேமிப்புக்கு என்று மீதம் இருக்கும் தொகை 6,710 ரூபாய். ஆனால், இவரின் அனைத்து எதிர்கால தேவைகளும் பூர்த்தியாக வேண்டும் என்றால் மாதம் 20,750 ரூபாய் தேவை. என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது, சொத்தாக இருக்கும் ஐந்து ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கர் நிலத்தை விற்று அதிலிருந்து கிடைக்கும் ஆறு லட்சம் ரூபாயிலிருந்து பெர்சனல் லோன், வாகனக் கடன், நகைக் கடனை அடைத்து விடலாம். ஆறு லட்சம் ரூபாய் கடன் தொகையிலிருந்து 4.94 லட்சம் ரூபாய் கழிந்தது போக மீதமிருக்கும் தொகை 1.06 லட்சம் ரூபாயை அவசரத் தேவைக்காக லிக்விட் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வைக்கவும்.
கடன்களை அடைப்பதன் மூலம் மாதத் தவணையாக கட்டிவந்த தொகை 11,440 ரூபாய் மிச்சமாகும். மகனின் கல்வித் தேவை பூர்த்தியாகும் வரையாவது குடும்பச் செலவுகளில் 3,500 ரூபாய் வரை மிச்சப்படுத்துவது உத்தமம். ஆக, செலவுகளை சிக்கனப்படுத்துவதன் மூலம் கிடைக்கும் தொகை 3,500 ரூபாய், இ.எம்.ஐ. கட்டிவந்த தொகை 11,440 ரூபாய், ஏற்கெனவே எதிர்காலத் தேவைகளுக்கு மீதமிருக்கும் தொகை 6,710 என மொத்தம் 21,650 ரூபாய் மீதமிருக்கும். இதை எதிர்காலத் தேவைக்கான முதலீட்டுக்கும், இன்ஷூரன்ஸ் பிரீமியத்துக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
அதேபோல, அடுத்த மாதம் முதல் விவசாய நிலத்திலிருந்து மூன்று லட்சம் ரூபாய் (ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் மூன்று லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும்) வருமானம் வருமென ராமச்சந்திரன் சொல்லியிருந்தார். அந்த தொகையை எடுத்து உறவினர்களிடமிருந்து வாங்கியிருக்கும் வட்டியில்லா கடனில் (ஐந்து லட்சம் ரூபாய்) 60 சதவிகித தொகையைக் கட்டிவிடலாம்.
மகனின் கல்வி மற்றும் திருமணத்திற்கு!
மகனை டாக்டராக்க வேண்டும் என்கிறார் ராமச்சந்திரன். மகனின் பள்ளிக் கல்வி முடிய முழுமையாக இன்னும் பத்து ஆண்டுகள் பாக்கி இருக்கிறது. இன்றைய நிலையில் 20 லட்சம் ரூபாய் என்பது அன்றைய நிலையில் 42 லட்சமாக தேவைப்படும். அதற்கு இன்றிலிருந்து மாதம் 14,000 ரூபாயை சுமார் 13.50% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் பத்து ஆண்டுகள் முதலீடு செய்துவர வேண்டும். முதலீடு முதிர்வின்போது 35.19 லட்சம் ரூபாய் கிடைக்கும். மீதி தேவைப்படும் தொகைக்கு கல்விக் கடன் வாங்கிக் கொள்ளலாம்.
மகனுக்கு 27 வயதில் திருமணம் செய்துவைக்க இன்றைய நிலையில் ஐந்து லட்சம் ரூபாய் தேவை என்று சொல்லியிருந்தார். திருமணத்திற்கு இன்னும் 19 ஆண்டுகள் பாக்கி இருக்கிறது என்பதால் அன்றைய நிலையில் 18 லட்சம்  ரூபாய் தேவைப்படும். இதற்கு இன்றிலிருந்து மாதம் 1,400 ரூபாயை சுமார் 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துவர வேண்டும். முதலீடு முதிர்வின்போது எதிர்பார்த்த தொகை கிடைத்துவிடும். அந்த தொகையை பயன்படுத்தி மகனின் திருமணத்தை சிறப்பாக முடிக்கலாம்.

வீட்டை விரிவாக்கம் செய்ய!
இன்னும் பத்து வருடங்களுக்குள் தற்போது இருக்கும் வீட்டின் மீது முதல் தளம் கட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதற்கு அன்றைய நிலையில் 10 லட்சம் தேவை. அதற்கு இன்றிலிருந்து மாதம் 4,350 ரூபாயை 12% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யவேண்டும். இவர் எதிர்பார்த்திருக்கும் 10 லட்சம் தொகையைவிட இன்னும் அதிக தொகை தேவைப்படலாம். எதற்கும் கூடுதல் தொகையை முதலீட்டின் மூலம் ஈட்டி வைத்துக்கொள்வது நல்லதே.
ஒவ்வொரு நான்கு ஆண்டுகளில் விவசாய நிலத்தின் மூலம் வருமானம் வருகிறது. அடுத்த நான்கு ஆண்டுகளில் மூன்று லட்சம் ரூபாய் வருமானம் என்கிறபோது அதிலிருந்து இரண்டு லட்சம் ரூபாயை எடுத்து உறவினர்களிடம் வாங்கிய வட்டியில்லா கடனின் பாக்கி இரண்டு லட்சம் ரூபாயை அடைத்துவிடுவது நல்லது. மீதமிருக்கும் ஒரு லட்சம் ரூபாயை அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு 10% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யவேண்டும். முதிர்வின்போது 1.77 லட்ச ரூபாய் கிடைக்கும். இதன்பிறகு இன்னொரு மூன்று லட்சம் ரூபாய் விவசாய வருமானத்திலிருந்து கிடைத்திருக்கும். அந்த தொகையை அப்படியே 8% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் இரண்டு ஆண்டுகள் முதலீடு செய்யவேண்டும். அப்படி முதலீடு செய்தால் கிடைக்கும் தொகை 3.50 லட்சம் ரூபாய். ஆக, பத்து ஆண்டுகளுக்குள் கிடைக்கும் இந்த தொகையையும் எடுத்து வீட்டு விரிவாக்கப் பணிக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஓய்வுக்காலத்திற்கு!
ஓய்வுக்காலத்தில் இன்றுபோல் அன்றும் செலவு செய்து வாழ சுமார் 33 லட்சம் ரூபாய் தேவை. ஓய்வுபெற இன்னும் 25 ஆண்டுகள் இருப்பதால் இன்றிலிருந்து மாதம் 1,000 ரூபாயை 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். மேலே சொன்ன மகனின் கல்வித் தேவைகள், திருமணத் தேவைகள் முடிந்ததும் அதற்காகச் செய்துவந்த முதலீட்டை நிறுத்திவிடாமல் ஓய்வுக்காலத்திற்காகத் தொடரலாம். அப்படி தொடர்ந்தால் ஓய்வுக்காலத்திற்கு இன்னும் அதிக தொகை கிடைக்கும். இதை பயன்படுத்தி ஓய்வுக் காலத்தை நிம்மதியாக கழிக்கலாம். வாழ்த்துகள்!
- செ.கார்த்திகேயன்,
படங்கள்: எஸ்.தேவராஜ்.